சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. 91 - அவர்களுக்கு அஞ்சலி இச்சிறு மண்ணிலே ஏதுமே இல்லையே ஏதுநான் செய்குவேனோ - இந்தப் பச்சிளம் பாலகர் பசியினைப் போக்கிடப் பசுதேடி யோடுவேனோ! அச்சிறு வண்டியாய் ஆகிய சிங்கையை அரங்கேற்ற ஏதுசெய்வேன் - என நிச்சைய மற்றதோர் நிலைதந்த கண்ணீரால் நெறிநின்ற நாடாக்கினாய் ! தொலைதூர எண்ணமும் துவளாத நெஞ்சமும் தொடுவாவானும் உன்கையிலோ - இமய மலைபோல உயர்வினை மண்ணிலே செய்தது மனங்கொண்ட தீயினாலோ! சிலையொன்று கல்லினுள் சிங்கமாய் இருப்பதை செதுக்குமுன் அறிந்தமகனோ - நீ இலையென் றறிததும் என்போ லறற்றிய எல்லோரும் உன்றன்சகனோ! தூய்மையை, யாருக்கும் தோன்றாத பூமியைத் தூங்காமல் கனவுகண்டாய் - நல்ல வாய்மையும் வலிமையும் வளமான வாழ்வதும் வாய்க்கவே நனவுகண்டாய்! தாய்மையாய் நான்கினச் சேய்களில் வேற்றுமை காணாத நினைவுகொண்டாய் - இது ஆய்மயி லோவென அகிலமே வியந்திட அழியாத தினவுகொண்டாய்! அண்ணலே அரசரே அழகான சிங்கையின் அடிநாத ஊற்றுதானோ - உன் மண்ணையும் மக்களையும் மனதுக்குள் ஏற்றிய மாமனித நாற்றுதானோ! விண்ணையும் சிங்கைபோல் வெளிச்சமாய் ஆக்கிட விழைந்தானோ கூற்றுவன்தான் - உன் கண்ணினை நிச்சையம் காத்திடு வாரென்ற கணக்கெனச் சாற்றுவேனோ! சிங்கையின் தந்தையே எங்குநீ சென்றனை சிந்துகண் ணீரோடையை - நீ கண்டிடில் உயிகொளும் காலனின் கணக்கையும் கட்டாயம் மாற்றுவாயே! எந்தனின் மக்களுக் கேதேனும் இடரெனில் இறந்தாலும் வந்துசேர்வேன் – வாக்கு சொன்னநீ இவ்வுலகு சோர்ந்திடும் வேளையில் சொல்லாமல் பிறந்துவருவாய்! காசாங்காடு அமிர்தலிங்கம் |
கவிதை > கவிஞர். அமிர்தலிங்கம் >